திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.103 திருக்கழுக்குன்றம்
பண் - குறிஞ்சி
தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
2
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
3
துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
4
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
5
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
8
இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
9
தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
10
கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com